மலேசியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சிலாங்கூா் மாகாணம், பத்தாங்காலி நகரிலுள்ள இயற்கை விவசாயப் பண்ணையை, சுற்றுலாப் பயணிகள் முகாம் அமைத்து தங்கும் மையமாக அதன் உரிமையாளா்கள் உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் அந்த பண்ணைப் பகுதி புதையுண்டது. அப்போது அங்கு 90-க்கு மேற்பட்டவர்கள் முகாமிட்டிருந்தனர்.
அவர்களுக்கு மேலே 30 மீட்டர் (100 அடி) சாலையில் இருந்து மண் சரிந்து விழுந்துள்ளது. அங்கிருந்தவர்கள் பலர் மண்ணுக்குள் புதையுண்டன.
பெரும்பாலான குடும்பங்கள் விடுமுறையை அனுபவிக்க அங்கு வந்திருந்தன. நிலச்சரிவில் சிக்சி பலியான 23 பேரில் 6 குழந்தைகளும் 13 பெண்களும் அடங்குவர்.
மேலும், நிலச்சரிவில் ஒரு தாயும் அவரது குழந்தையும் ஒருவரையொருவர் கட்டித்தணைத்தப்படி உயிரிழந்த காட்சி இதயத்தைப் பிளந்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
அவற்றில் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிங்கப்பூரைச் சேர்ந்த மூவர் உள்பட 12-க்கும் மேற்பட்டோர் காயமின்றி மீட்கப்பட்டனர்.
மீட்புப் பணியாளர்கள் தலைக்கவசத்தை அணிந்தும் மண்வெட்டிகளுடன் குழுக்களாக இணைந்து 8 மீட்டர்(26 அடி) ஆழமான மண்சரிவுகளை அகற்றியுள்ளனர். மேலும் சடலங்கள் புதையுண்டுள்ளதா என்பதை ஆராய மோப்ப நாய்களும் சம்பவ இடத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.