தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் பெண்கள் கழிவறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ஆஸ்திரேலிய தூதரகத்தின் முன்னாள் பணியாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் உயர்மட்ட அலுவலர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பணியாளரை ராயல் தாய் போலீஸ் கடந்த மாதம் கைது செய்திருப்பதை ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "அனைத்து ஊழியர்களின் நலன் மற்றும் தனியுரிமையே வெளியுறவுத்துறைக்கு முன்னுரிமையாக உள்ளது. தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்குவருகிறோம்" என்றார்.
இதுகுறித்து சட்ட விவரங்களை அளிக்க அவர் மறுத்துவிட்டார். ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பது குறித்து தாய்லாந்து காவல்துறையின் வெளியுறவு பிரிவு தளபதி கெமரின் ஹசிரி கூறுகையில், "ஆஸ்திரேலிய தூதரகம் அந்த நபர் மீது ஜனவரி 6 அன்று புகார் அளித்தது. விசாரணை நடைபெற்றுவருகிறது" என்றார்.
கழிவறையில் எவ்வளவு நாள்களாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்தாண்டு கழிவறையின் தரையில் கேமராவுக்கான எஸ்டி கார்டு இருப்பது கண்டெடுக்கப்பட்ட பிறகுதான் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி நடந்திருப்பதை இந்த சம்பவம் வெளிக்காட்டுகிறது என ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் வியூகத்துறை சார்ந்த படிப்புகளின் பேராசிரியராக பணியாற்றிவரும் ஹக் ஒயிட் இதுகுறித்து கூறுகையில், "இம்மாதிரியான பாதுகாப்பான பகுதிக்குள் கேமரா போன்ற சாதனைங்களை அனுமதித்திருப்பது அங்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டிருப்பதை சுட்டிகாட்டிகிறது என்றால், அந்த தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை என்பதாகத்தான் கருத வேண்டும்" என்றார்.