செயலிழந்த நுரையீரல்; 6 மாதம் எக்மோ: மரணத்தை வென்ற முன்களப் பணியாளர்

இரண்டாம் அலையின்போது கரோனாவினால் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சையால் இன்று மரணத்தை வென்று வெற்றியுடன் வீடு திரும்பியுள்ளார். 
செயலிழந்த நுரையீரல்; 6 மாதம் எக்மோ: மரணத்தை வென்ற முன்களப் பணியாளர்
செயலிழந்த நுரையீரல்; 6 மாதம் எக்மோ: மரணத்தை வென்ற முன்களப் பணியாளர்
Published on
Updated on
2 min read

துபை: கரோனா மூன்றாம் அலையே வந்துவிட்டது.. துபையில், பணியாற்றி வந்த கேரளத்தைச் சேர்ந்த முன்களப் பணியாளர், இரண்டாம் அலையின்போது கரோனாவினால் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சையால் இன்று மரணத்தை வென்று வெற்றியுடன் வீடு திரும்பியுள்ளார். 

இரண்டாவது அலையின்போது கரோனா பாதித்து நுரையீரல் முற்றிலும் பழுதாகி, ஆறு மாதங்கள் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல், நினைவிழந்து எக்மோ உதவியுடன் சிகிச்சை பெற்று.. இன்று பூரண உடல்நலத்துடன் வீடு திரும்பிவிட்டார் 38 வயதாகும் இந்தியாவைச் சேர்ந்த முன்களப்பணியாளர்.

துபையில் உள்ள மருத்துவமனையிலிருந்து வியாழக்கிழமை அவர் வீடு திரும்பினார்.

அருண்குமார் எம். நாயர், அறுவை சிகிச்சை மைய தொழில்நுட்ப நிபுணர். கரோனா பேரிடரின்போது முன்களப் பணியாளராக களத்திலிருந்து பணியாற்றிய போது கரோனா தொற்றுக்குள்ளாகி, நுரையீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மூச்சு விட முடியாமல், எக்மோ கருவியின் உதவியுடன் சுமார் அரையாண்டுகள் கரோனாவுடனான போராட்டம் நீடித்தது. 

இந்த ஆறு மாத காலத்தில், அவரது உடல் பல்வேறு அபாயக்கட்டங்களை எட்டியது. ஒரு முறை மாரடைப்பும் ஏற்பட்டு, அதிலிருந்தும் மீண்டார். தங்கள் நாட்டுக்காக முன்களப் பணியாளராகப் போராடி, இந்த நிலைக்குத் தள்ளப்பட்ட அருண்குமாருக்கு, பல்வேறு அமைப்புகளும் நிதியுதவிகளை செய்தன.

அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவதை, மருத்துவமனை நிர்வாகவே விழா நடத்திக் கொண்டாடியது. அந்த விழாவின்போது, அவரிடம், நிதியுதவியும் வழங்கப்பட்டது.

அது மட்டுமல்ல, மருத்துவ அமைப்புகள், அவரது மனைவிக்கு வேலை வழங்கவும், குழந்தைகளின் பள்ளிப் படிப்புக்கான செலவை ஏற்கவும் முன்வந்துள்ளன. 

கேரளத்தைச் சேர்ந்த அருண் நாயர், சுமார் 5 மாதங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் அவர் சாதாரண பிரிவுக்க மாற்றப்பட்டார். 

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒன்றே ஒன்று தெரியும், மரணத்தின் பிடியிலிருந்து நான் நூலிழையில் தப்பிவந்துள்ளேன். நான் உயிருடன் இருக்கிறேன் என்றால் அது எனது குடும்பத்தின், நண்பர்களின் பிரார்த்தனைதான் காரணம் என்கிறார்.

2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் அபுதாபியில் உள்ள எல்எல்எச் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அருண்குமாருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் அங்கு 2013ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். அவருக்கு கரோனா பாதிப்பு கடுமையானதைத் தொடர்ந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஜூலை 31ஆம் தேதி எக்மோ கருவி பொருத்தப்பட்டது. சுமார் 118 நாள்கள் அதன் உதவியோடுதான் அருண் சுவாசித்துவந்தார். 

சரி செய்ய முடியாத அளவுக்கு அவரது நுரையீரல்கள் கெட்டுப்போயிருந்தன. எக்மோவால் மட்டுமே சுவாசிக்க முடிந்தது அவரால். இதுவே 118 நாள்களுக்கும் நீடித்தது. வழக்கமாக, இப்படி ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர் பிழைக்க வாய்ப்பே இல்லை. அதனால்தான் அருண் குணமடைந்ததை நாங்கள் எல்லோரும் அதிசயம் என்று வர்ணிக்கிறோம் என்கிறார் அவருக்கு சிகிச்சையளித்து வந்த இதய நோய் மருத்துவர் தாரிக்.

விரைவில் அவர் இந்தியா திரும்பி தனது குடும்பத்தினரை சந்திக்க உள்ளார். அடுத்த மாதமே மீண்டும் தனது பணியில் சேர வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் அருண்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com