லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பொறுப்பை ஆன்ரிவ் ஃபோர்மிகா ராஜிநாமா செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், சிஇஓ பதவியை துறப்பதற்காக தெரிவித்துள்ள காரணம் தொழில் துறையினர் உள்பட அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. பதவி, பணத்தைத் துறந்து 'கடற்கரையில் அமர்ந்து சும்மா இருக்க விரும்புவதாக' ஃபோர்மிகா தெரிவித்துள்ளார்.
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஜுபிட்டர் என்ற நிதி நிறுவனம் ரூ.5.37 லட்சம் கோடி மதிப்புடையது. இந்த நிறுவனத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஆன்ரிவ் ஃபோர்மிகா தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.
51 வயதாகும் ஃபோர்மிகா தற்போது தனது தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். அக்டோபர் 1ஆம் தேதி முதல் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்து சொந்த கிராமத்திற்கு செல்லவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக மேத்திவ் பீஸ்லி ஜுபிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் பேட்டியளித்துள்ள அவர், ''சிஇஓ பொறுப்பைத் துறைந்து கடற்கரையில் ஒரு வேலையையும் செய்யாமல் அமர்ந்திருக்க விரும்புகிறேன். அதனால்தான் சிஇஓ பொறுப்பைத் துறக்கிறேன்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் துறை முதலீட்டு நிர்வாகத்தில் 27 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆன்ரிவ் ஃபோர்மிகா, ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வயதான தாய் - தந்தையருடன் நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பணத்தின் தேவைக்கு இயந்திரமாக அனைவரும் சுழன்றுகொண்டிருக்கும் வேலையில், ஃபோர்மிகாவின் இந்த முடிவு ஜுபிட்டர் நிறுவனத்தாரை மட்டுமல்லாது உலகம் முழுவதும் பலரையும் வியக்க வைத்துள்ளது.