உக்ரைனின் ஒக்திர்கா நகரில் உள்ள ராணுவ தளத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 70 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் - ரஷ்யா இடையே 6வது நாளாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.
நேற்று கார்கிவ் நகரிலுள்ள குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து இன்று ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுறுவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து சுமார் 1.5 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களும் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.
ரஷிய ராணுவத்திற்கு எதிராக போரிடும் வகையில் உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை செய்ய முன்வந்துள்ளன. இதனை எச்சரித்த ரஷியா, உக்ரைன் மீது தனது தாக்குதலை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
உக்ரைனின் கீவ் மற்றும் கார்கீவ் ஆகிய நகரங்களுக்கு இடையிலுள்ள ஒக்திர்கா பகுதியிலுள்ள ராணுவ தளத்தின் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 70 வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்த நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உக்ரைன் நாட்டிலுள்ள குடிமக்கள் பலர் அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்திய மாணவர்கள் பலர் உக்ரைன் எல்லைகளில், உணவு இருப்பிடமின்றி கடும் குளிரில் தவித்து வருகின்றனர்.