உக்ரைனின் கார்கிவ் நகரிலுள்ள இந்தியர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற இந்திய தூதரகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி ரஷியப் படைகள் முன்னேறி வருகிறது. குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள் என அரசின் கட்டடங்களை ஏவுகணை மூலம் தாக்கி வருகின்றனர்.
இதையும் படிக்க | கெர்சன் நகரைக் கைப்பற்றியதாக ரஷிய ராணுவம் அறிவிப்பு!
கார்கிவ் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் சூழலில் அங்குள்ள இந்தியர்களுக்கு அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
அதில், கார்கிவ் நகரிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு கருதி மாலை 6 மணிக்குள்(இந்திய நேரப்படி இரவு 9.30 மணி) கண்டிப்பாக வெளியேறி பெசோசின், பாஃபாயி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல உத்தரவிடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.