பாகிஸ்தான், துருக்கி மாணவர்களையும் காப்பாற்றிய இந்திய தேசியக்கொடி!

உக்ரைனில் போர் நடந்து வரும் சூழ்நிலையில், இந்திய தேசியக் கொடி இந்தியர்களை மட்டுமின்றி பாகிஸ்தான், துருக்கியைச் சேர்ந்த மாணவர்களையும் காப்பற்றிய சுவாரசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உக்ரைனில் போர் நடந்து வரும் சூழ்நிலையில், இந்தியர்களை மட்டுமின்றி பாகிஸ்தான், துருக்கியைச் சேர்ந்த மாணவர்களையும் இந்திய தேசியக் கொடி காப்பற்றிய சுவாரசிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலை அடுத்து உக்ரைனில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் கல்வி, வேலைக்காகக் சென்ற வெளிநாட்டினரும் அண்டை மாநிலங்களுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்தவகையில் மத்திய அரசு சிறப்பு விமானங்கள் மூலமாக உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் இந்தியர்களை மீட்டு வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரோமானியாவின் புச்சாரெஸ்ட் பகுதிக்கு இந்திய மாணவர்கள் வந்துள்ளனர். மால்டோவா எல்லைக்கு வந்து அங்கிருந்து ரோமானியா சென்றுள்ளனர். அவர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக தேசியக்கொடியை ஏந்தி வந்துள்ளனர். 

இந்த சூழ்நிலையில், பாதுகாப்பு கருதி பாகிஸ்தான், துருக்கி மாணவர்களும் இந்திய தேசியக்கொடியுடன் எல்லையைக் கடந்துள்ளனர். 

இந்திய தேசியக்கொடியை பிற நாட்டினர் ஏந்தி வருவது தங்களுக்குப் பிரச்னை இல்லை என்று இந்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து ஒரு மாணவர், 'நான் மார்க்கெட்டிற்கு ஓடிச்சென்று ஒரு அட்டையும், பெயிண்டும் வாங்கினேன். அட்டையை வெட்டி அதில் இந்திய தேசியக்கொடி போன்று வரைந்து அதன் உதவியுடன் எல்லையைக் கடந்தேன்' என்றார். 

துருக்கி மற்றும் பாகிஸ்தான் மாணவர்களும் இந்திய தேசியக்கொடியின் உதவியுடன் எல்லையைக் கடந்ததாகவும் இந்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு மாணவர் ஒருவர் கூறுகையில், 'நாங்கள் உக்ரைனின் ஒடெஸா பகுதியில் இருந்து பேருந்தில் மால்டோவா எல்லைக்கு வந்தோம். மால்டோவா நாட்டினர் மிகவும் நல்லவர்கள். எங்களுக்கு இலவச டேக்சி, பேருந்து அளித்ததுடன் தங்குவதற்கு இடமும் கொடுத்தனர். மேலும் ரோமானியாவில் உள்ள இந்தியத் தூதரகமும் தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்திய விமானம் வரும்வரை எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர். மால்டோவா மற்றும் இந்திய தூதரகரத்திற்கு நன்றி' என்றார். 

உயிரைக் காப்பற்றிக்கொள்வதற்காக இந்தியர்களுடன் பிற நாட்டினரும் இந்திய தேசியக்கொடியை ஏந்தி வந்த நிகழ்வு உண்மையில் நெகிழ்வை ஏற்படுத்துகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com