தான் ஒரு நாட்டின் அதிபர் என்றும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்றும் கூறிய உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, தங்கள் நிலத்தில் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியா போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது, உக்ரைன் மீதான போரில் ரஷியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
ஆனால், ரஷியா இதனை மறுத்ததுடன், உக்ரைன்தான் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.
இதற்குப் பதில் அளித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி,
நான் ஒரு நாட்டின் தலைவன், இரண்டு குழந்தைகளுக்கு தந்தை, எனது நிலத்தில் ரசாயன ஆயுதங்களோ, பேரழிவை ஏற்படுத்தும் வேறு ஆயுதங்களோ உருவாக்கப்படவில்லை.
ரஷியாவின் திட்டங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் ரஷியா பிறர்மீது குற்றம் சாட்டுவதை கவனித்தாலே போதும்.
அமைதியான ரஷியா மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளோம். இப்போது ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்தவிருப்பதாகக் கூறுகிறார்கள்.
உலகத்திற்கு என்ன நடக்கிறது என்று தெரியும். எங்களுக்கு எதிராக ஏதாவது செய்தால், ரஷியா மேலும் மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பெறும்' என்று கூறியுள்ளார்.
உக்ரைனில் அமெரிக்கா ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாகவும் இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் என்று ரஷியா கோரிக்கை விடுத்துள்ளதும் அதன்படி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.