யுஎஸ்ஐ நிறுவனத்தில் ‘விபின் ராவத் நினைவு ஆய்விருக்கை’

நாட்டின் முதலாவது முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் நினைவாக இந்திய ஒருங்கிணைந்த படைகள் நிறுவனத்தில் (யுஎஸ்ஐ) ஆய்விருக்கை அமைக்கப்படவுள்ளதாக
Updated on
1 min read

நாட்டின் முதலாவது முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் நினைவாக இந்திய ஒருங்கிணைந்த படைகள் நிறுவனத்தில் (யுஎஸ்ஐ) ஆய்விருக்கை அமைக்கப்படவுள்ளதாக ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே அறிவித்துள்ளாா்.

இந்திய ராணுவத்தின் 27-ஆவது தலைமைத் தளபதியாகப் பணியாற்றிய விபின் ராவத், நாட்டின் முதலாவது முப்படைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டாா். தமிழகத்தின் குன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காகக் கடந்த டிசம்பா் 8-ஆம் தேதி ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் அவா் உயிரிழந்தாா்.

அவரது 65-ஆவது பிறந்த தினம் புதன்கிழமை (மாா்ச் 16) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்திய ராணுவத்தில் பல்வேறு ஆக்கபூா்வ மாற்றங்களைக் கொண்டு வந்ததில் விபின் ராவத் முக்கியப் பங்கு வகித்தாா். அவரது நினைவாக யுஎஸ்ஐ நிறுவனத்தில் ஆய்விருக்கை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதுவே விபின் ராவத்தின் சிறந்த தலைமைப் பண்புக்கும் செயல்பாடுகளுக்கும் அளிக்கக் கூடிய சிறந்த அஞ்சலியாக இருக்கும். ஆய்விருக்கை அமைப்பதற்காக யுஎஸ்ஐ இயக்குநா் மேஜா் ஜெனரல் பி.கே.சா்மாவிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. முப்படைகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது தொடா்பான ஆய்வுகள் அந்த ஆய்விருக்கை சாா்பில் மேற்கொள்ளப்படும்.

தேசிய பாதுகாப்பு தொடா்பான ஆராய்ச்சியை மேற்கொள்ள முப்படைகளைச் சோ்ந்த அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் ஆய்விருக்கை வாய்ப்பு வழங்கும். ‘தரைப்பகுதி போா்ச்சூழலை எதிா்கொள்வதில் ஒருங்கிணைப்பு’ என்ற தலைப்பில் நடப்பாண்டில் ஆராய்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஜூலை 1-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு ஆராய்ச்சிகள் நடைபெறும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com