வன்முறையில் 7 பேர் பலி; வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்கிறாரா மகிந்த ராஜபட்ச?

இலங்கையில் நடந்த வன்முறையில் ஆளுங்கட்சி எம்.பி. உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர்.
வன்முறையில் 7 பேர் பலி; வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்கிறாரா மகிந்த ராஜபட்ச?
வன்முறையில் 7 பேர் பலி; வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்கிறாரா மகிந்த ராஜபட்ச?


கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியை ராஜிநாமா செய்திருக்கும் மகிந்த ராஜபட்ச, பிரதமர் மாளிகையான அலரியிலிருந்து மிகுந்த பாதுகாப்புடன் வெளியேறினார். அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையில் நடந்த வன்முறையில் ஆளுங்கட்சி எம்.பி. உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர். மகிந்த ராஜபட்சவின் வீடு உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வீடுகள் பலவும் தாக்குதலுக்கு உள்ளாகின.

திங்கள்கிழமை இரவு, அரசுக்கு எதிராக போராடிய மக்கள் கொழும்பில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் அங்கேயிருந்த வாகனங்களை எரித்தனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச (76) தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

அதிபா் அலுவலகத்துக்கு எதிரே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீது அவரின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் ராஜிநாமா முடிவை மகிந்த ராஜபட்ச அறிவித்தாா்.

இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். 

ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பொலநருவா மாவட்டத்தைச் சோ்ந்த எம்.பி.யான அமரகீா்த்தி அதுகொரளாவை வடமேற்கு நகரமான நிதம்புவாவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரா்கள் சூழ்ந்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அப்போது, அதுகொரளாவின் வாகனத்தில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த போராட்டக்காரா்கள் அவரது வாகனத்தை தாக்கி கவிழ்த்ததாகவும் கூறப்படுகிறது.

போராட்டக்காரா்களிடம் இருந்து தப்பிக்க அதுகொரளாவும் அவரது பாதுகாவலரும் அருகே உள்ள கட்டடத்தில் தஞ்சமடைந்ததாகவும், அந்தக் கட்டடத்தை போராட்டக்காரா்கள் சூழ்ந்த நிலையில் அதுகொரளாவும் அவரது பாதுகாவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனா் எனவும் தகவல்கள் வெளியாகின.

ஊரடங்கு அமல்

பிரதமா் மகிந்த ராஜிநாமா மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையையடுத்து, நாடு முழுவதும் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக காவல் துறை அறிவித்தது. காலிமுகத் திடல் பகுதியில் காவல் துறையினருக்கு உதவும் வகையில் ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டனா்.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் ஆதரவு தரும்படி பாதுகாப்புத் துறைச் செயலா் கேட்டுக்கொண்டார். ஏற்கெனவே கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் இலங்கையில் 2-ஆவது முறையாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com