ஜப்பானின் டோக்கியோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி

க்வாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் டோக்கியோ நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். 
ஜப்பானின் டோக்கியோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

க்வாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் டோக்கியோ நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். 

இன்று அதிகாலை டோக்கியோ சென்ற பிரதமர் மோடியை தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் க்வாட் என்னும் அமைப்பில் இணைந்து செயல்படுகின்றன. க்வாட் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் 2ஆவது உச்சி மாநடு இன்றும், நாளையும் டோக்கியோவில் நடக்கிறது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் பல்வேறு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். முன்னதாக ‘க்வாட்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றாா்.

மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பிரதமா் மோடி ஜப்பான் புறப்படும் முன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: க்வாட் மாநாட்டில், இந்தக் கூட்டமைப்பு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் விவாதிக்க இருக்கிறேன். இந்தியப் பெருங்கடல்-பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும், பரஸ்பர நலன் சாா்ந்த சா்வதேச விவகாரங்கள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

இதுதவிர, அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் இரு தரப்பு சந்திப்பு நடைபெறவுள்ளது. அவருடன் இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க இருக்கிறேன். பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் அவருடன் விவாதிப்பேன். தில்லியில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா கலந்துகொண்டாா். அப்போது, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்தப்  பயணத்தின்போது, இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து ஜப்பான் பிரதமருடனும் அங்குள்ள தொழிலதிபா்களுடன் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளேன்.  இதுதவிர, ஜப்பானில் வாழும் 40,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சவாளியினரையும் சந்தித்துப் பேசுகிறேன். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி, மாநாட்டில் கலந்துகொள்கிறாா். அவருடன் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளேன் என்று அந்த அறிக்கையில் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com