சீனாவில் கடந்த 6 மாதங்களில் முதல் முறையாக இன்று (நவம்பர் 20) கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
சீனாவில் கடந்த சில தினங்களாக கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசு பூஜ்ஜிய கரோனா திட்டத்தின் கீழ் பல்வேறு கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படுவது, மக்கள் அவசியமின்றி வெளியில் வருவது போன்ற செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: ‘அன்பான ரசிகர்களே...’ : சமந்தாவின் நெகிழ்ச்சி பதிவு
இந்த நிலையில், கரோனா பெருந்தொற்றுக்கு இன்று (நவம்பர் 20) ஒருவர் உயிரிழந்துள்ளார். இறந்த நபருக்கு 87 வயது என்பதும், அவர் பெய்ஜிங்கைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடைசியாக கடந்த மே மாதம் 26ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். அதன்பின் 6 மாதங்களுக்குப் பிறகு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,227 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் 92 சதவிகிதம் பேர் ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சீனாவின் பூஜ்ஜிய கரோனா திட்டத்தின் கீழ் பல விதமான கரோனா கட்டுப்பாடுகளை விதித்து சீனாவில் ஒரு கரோனா நோயாளி கூட இல்லாத நிலை உருவாக சீன அரசு கடுமையாக உழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.