லண்டன்: வரும் 2023ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கும் விழா நடைபெறவிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவியேற்பு விழாவில், பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ராணி கன்சார்ட் கமிலா கோஹினூர் வைரம் பதித்த மகுடத்தை அணிந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் ஆங்கில ஊடகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் தகவலில், மிகவும் சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் பதித்த மகுடத்தை கமிலா அணியக் கூடாது என்றும், அது சர்வதேச அளவில் கொந்தளிப்பைக் கூட ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிபுணர்கள் அளித்த பேட்டியிலும், மன்னர் பதவியேற்பு விழாவில் கோஹினூர் வைரம் பதித்த மகுடத்தைக் காண வாய்ப்பில்லை என்றே கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கோஹினூர் மகுடம், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உயிர் மூச்சு பிரியும் வரை அவரிடமே இருந்தது. அதற்குப் பிறகு வழக்கமாக, அடுத்த ராணியான கமிலாவிடம் அது ஒப்படைக்கப்படுகிறது.
இன்று இத்தனை கேள்விகளுக்கு உள்ளாகும் அந்த மகுடத்தை, 1937ஆம் ஆண்டு மன்னார் ஆறாம் ஜார்ஜ் பதவியேற்றபோது, ராணி எலிசபெத்தின் தாய் அதனை அணிந்திருந்தார் என்று வரலாறுகள் சொல்கின்றன.
அந்த கோஹினூர் வைரம் 105.6 காரட் எடைகொண்ட உலகிலேயே மிகவும் பொக்கிஷமாக வைரமாகப் பார்க்கப்படுகிறது. இது 14ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.