உக்ரைனின் புச்சாவில் ரஷியப் படையினர் நிகழ்த்திய படுகொலைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரில், தலைநகர் கீவ் அருகே புச்சா பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு 400க்கும் மேற்பட்ட உடல்கள் கைப்பற்றப்பட்டது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட உடல்களில் கைகள் கட்டப்பட்டும் மிகவும் நெருக்கமான தூரத்தில் துப்பாக்கியால் சுட்டும் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன.
ரஷியப் படையினர் செய்தது இனப்படுகொலை என்று உக்ரைன் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் புச்சா படுகொலை குறித்து கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிஸ், 'உக்ரைனில் இருந்து சமீபத்தில் வந்த செய்திகள், நம்பிக்கை, நிம்மதியைத் தராமல் புச்சா படுகொலை குறித்த அட்டூழியங்களை கொண்டு வந்துள்ளன.
குடிமக்கள், ஆயுதம் வைத்திராத பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடந்துள்ள கொடூரம். அந்த அப்பாவிகளின் ரத்தம் வானத்தை நோக்கி, 'இந்தப் போரை நிறுத்து! ஆயுதங்கள் அமைதியாக இருக்கட்டும்! மரணத்தையும் அழிவையும் விதைப்பதை நிறுத்து' என்று கூக்குரலிடுகின்றன' என்று கூறியுள்ளார்.
முன்னதாக உக்ரைனின் புச்சாவில் இருந்து அனுப்பப்பட்ட உக்ரைன் கொடிக்கு முத்தமிட்டு அதனை உயர்த்திக் காட்டினார். வாடிகன் ஆடிட்டோரியத்தில் நடந்த பார்வையாளர்கள் நிகழ்வில் உக்ரைனில் இருந்து வந்த 10 சிறுவர்களை அழைத்துப் பேசினார்.