தெற்கு உக்ரைனில் உள்ள மக்களை ரஷியப் படையினர் சித்திரவதை செய்வதாகவும் மக்கள் பிரதிநிதிகளை கடத்துவதாகவும் உக்ரைன் அதிபர் வெலொதிமீர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இதுகுறித்து கேள்வி எழுப்பவும் தீர்வு காணவும் உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷியாவின் போர்க்கப்பலை உக்ரைன் படையினர் அழித்ததை அடுத்து உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் கடந்த சில தினங்களாக தீவிரமடைந்துள்ளது.
உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷியப்படையினர் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். மேலும் கீவ் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தலைநகர் கீவ் பகுதியைச் சுற்றி சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கில் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 'ரஷியப்படையினர் உக்ரைனின் முக்கிய பகுதிகளில் மக்களை சிறைபிடித்து சித்திரவதை செய்கின்றனர். இதற்காக அவர்கள் சித்திரவதை அறைகளை காட்டியுள்ளனர். மக்களின் பிரதிநிதிகளை கடத்தி இங்கு வைத்து சித்திரவதை செய்கின்றனர்' என்று அதிபர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இதுகுறித்து உலக நாடுகள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, 'மனிதாபிமான உதவிகள் செய்வதையும் ரஷியப்படையினர் தடுத்து வருவதால் பல நகரங்களில் மக்கள் கடுமையாக பஞ்சத்தால் அவதிப்படுகின்றனர். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் கடந்த 4 நாள்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 106 பேர் காயமடைந்துள்ளனர். இது திட்டமிட்ட பயங்கரவாதத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. சாதாரண குடியிருப்பு பகுதிகளில் சாதாரண மக்களுக்கு எதிராக வலிமை மிகு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன' என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.