உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியுள்ளார்.
ஓரிரு தினங்களுக்கு முன்பாக ரஷியாவின் போர்க்கப்பலை உக்ரைன் படையினர் அழித்ததை அடுத்து உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியை குறிவைத்து ரஷியப் படை தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷியப் படை இன்று லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளில் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான அனைத்து வேலைகளிலும் உக்ரைன் தீவிரமாக இறங்கியுள்ளது. மறுபக்கம் ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் விவகாரம் குறித்து உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளைக் குறிவைக்கும் ரஷியப் படை!