இந்தியாவில் தடுப்பூசிகளைத் தயாரித்த உற்பத்தியாளர்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியத் தூதரகம் சார்பில் இந்தியா-அமெரிக்கா நலன் தொடர்பாக நேற்று செவ்வாய்கிழமை இணைய வழிக் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பேசிய உலகின் முன்னணி செல்வந்தரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் ‘கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு இந்தியா 100 நாடுகளுக்கு மேல் 15 கோடித் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. அதற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உலகின் பல்வேறு நாடுகளும் நிமோனியா, ரோட்டோ வைரஸ் போன்ற நோய்களில் குழந்தைகள் பாதிக்காமல் இருக்க தடுப்பூசிகளை வழங்குகிறது’ எனத் தெரிவித்தார்.
மேலும் தன் உரையில், நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமைகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் உலக சுகாதாரத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை நிலை நிறுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக பில் கேட்ஸ் குறிப்பிட்டார்.