சர்வதேச நிதியத்திடமிருந்து பாகிஸ்தான் கடன் பெற்றதற்கு அந்நாட்டு அரசுக்கு எதிராக சிவில் சமூகத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதியை தவறாக நிர்வகித்ததாலும் வெளிநாடுகளை அளவுக்கு அதிகமாக நம்பியிருப்பதாலும் பாகிஸ்தான் அரசு மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதாக இஸ்லாம் கபர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆறாம் தவணை கடனுக்கும் சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்திருப்பதாக பாகிஸ்தான் நிதியமைச்சர் ஷௌகத் தாரின் ட்விட்டரில் பதிவிட்டதை தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் அதிருப்தி தெரிவித்தனர். "பாகிஸ்தான் திட்டத்திற்கு 6வது தவணை கடனை அளிக்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என அவர் பதிவிட்டிருந்தார்.
கடன் வாங்கியதற்கு எதிராக பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட கட்டுரையில், "நிதியமைச்சர் தேசத்தை அடிமையாக்கி, சர்வதேச நிதியத்தின் அடுத்த தவணையைப் பெற்றதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது ஆச்சரியம் மட்டுமல்ல வருத்தமும் அளிக்கிறது. அநேகமாக, அன்றாட பணிகளுக்காக கடனை கோரும் ஒரே அணுசக்தி நாடு பாகிஸ்தானாகத்தான் இருக்கும். உதவிக்காக கெஞ்சுவது பல ஆண்டுகளாக தொடர்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நிபந்தனைகளுடன் சர்வதேச நிதியத்திடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான கடனாக வாங்கியுள்ளது. இதன் விளைவாக, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில் எரிவாயு மற்றும் மின்சார விலை உயர்ந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக சர்வதேசம் நிதியம் பாகிஸ்தானுக்கு வழங்க ஒப்புதல் அளித்தது.