உக்ரைன் மீது ரஷியா 2-ஆம் நாள் போர்த்தாக்குதலைத் தொடங்கியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்-ல் ஏவுகணைகள் கொண்டு தாக்கி வருகிறது.
நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் எல்லையில் சுமாா் 1.50 லட்சம் ராணுவ வீரா்களை குவித்ததால் எந்த நேரமும் போர்ச் சூழல் உருவாகும் அபாயம் இருந்து வந்தது.
அதன்படி, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. நேற்று தலைநகர் கீவ் வரை ரஷிய படைகள் முன்னேறியுள்ளன. அங்குள்ள செர்னோபில் அணு உலையையும் ரஷிய படை கைப்பற்றியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. போரை நிறுத்தவும் பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ரஷியா நடத்திய முதல்நாள் தாக்குதலில் 137 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக ரஷியா இன்று உக்ரைன் மீதான 2 ஆம் நாள் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. தலைநகர் கீவில் பயங்கர சத்தத்துடன் கூடிய இரண்டு தாக்குதல்கள் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்துள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தஞ்சம் புகுகின்றனர்.
முன்னதாக, 'ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் தனித்துப் போரிட்டு வருவதாகவும் உக்ரைனுக்கு உதவ யாரும் இல்லை என்றும் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.