போர் மூண்ட உக்ரைனில் சிக்கியுள்ள மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர், தனது வளர்ப்பு நாயை விட்டுவிட்டு வெளியேற மறுக்கும் சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரேடியோ எலக்ட்ரானிக்ஸ் கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் படித்துவருபவர் ரிஷப் கெளசிக். தன்னுடன் தனது நாயை விமானத்தில் கொண்டு செல்வதற்காக தேவையான அனைத்து ஒப்புதல்களை பெற முயற்சித்துவருவதாக அவர் கூறியுள்ளார். ஆனால், மேலும் மேலும் ஆவணங்களை கேட்டு அலுவலர்கள் தாமதப்படுத்திவருவதாக அவர் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து விடியோ வெளியிட்டுள்ள அவர், "என்னிடம் விமான டிக்கெட் கேட்கிறார்கள். உக்ரேனிய வான்வெளி மூடப்பட்டிருக்கும் போது நான் எப்படி விமான டிக்கெட்டைப் பெறுவது?. தில்லியில் உள்ள இந்திய அரசின் விலங்கு தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவையையும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தையும் அணுகினேன். ஆனால், எந்த பயனும் இல்லை.
தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைத்தை தொடர்பு கொண்டு எனது நிலை குறித்து தெரிவித்தேன். ஆனால், அவர் என்னை திட்டிவிட்டார். ஒத்துழைக்கவில்லை. இந்திய சட்டத்தின்படி தேவையான என்ஓசி சான்றிதழ் எனக்கு வழங்கியிருந்தால் நான் இப்போது இந்தியாவில் இருந்திருப்பேன். இன்று விமானத்தில் பயணம் செய்திருக்க வேண்டும். ஆனால், இங்கு மாட்டிக்கொண்டேன்" என்றார்.
தனது வளர்ப்பு நாயை அறிமுகப்படுத்திய அவர், "எனது நாய் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. குண்டு சத்தம் கேட்பதால் எந்நேரமும் அழுது கொண்டே இருக்கிறது. உங்களால் முடிந்தால் எங்களுக்கு உதவுங்கள். கிவ்வில் உள்ள இந்திய தூதரகம் கூட எங்களுக்கு உதவவில்லை. எங்களிடம் யாரிடமிருந்தும் தகவல் வரவில்லை" என்றார்.
ரஷியப் படைகள் பீரங்கித் தாக்குதல் மற்றும் கப்பல் ஏவுகணைகள் மூலம் நகரத்தைத் தாக்கிவரும் நிலையில், கௌசிக் தலைநகர் கீவில் உள்ள ஒரு பதுங்கு குழியில் மறைந்துள்ளார்.