அபுதாபியில் எரிபொருள் டேங்கர் வெடித்ததில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அபுதாபியில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று எரிபொருள் டேங்கர்கள் வெடித்தன. மேலும், விமான நிலையத்தின் நீட்சியாகப் புதிதாகக் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இதில் டேங்கர்கள் வெடித்ததில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுபற்றி ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் சஞ்சய் சுதீர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இந்தியர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது" என்றார்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதரகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
"அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் அருகே முசாஃபாவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் இரண்டு இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதல் தகவல்களுக்காக சம்பந்தப்பட்ட ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தொடர்பிலேயே உள்ளது."