கொழும்பு: இலங்கையின் பொருளாதார நிலையை சீர் செய்யாததால், அதிபர் பதவியிலிருந்து விலகக் கோரி, அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் கோத்தபய ராஜபட்ச தப்பியோடினார்.
இலங்கை அதிபர் மாளிகையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை எல்லாம் தள்ளிவிட்டு, மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, அதிபர் கோத்தபய ராஜபட்சவை ராணுவத்தினர் பாதுகாப்பாக அதிபர் மாளிகையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபட்ச, ராணுவ தலைமையகத்தில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. வெளிநாடு தப்பிச்செல்கிறாரா இலங்கை அதிபர்? வெளியான விடியோ
அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய நிலையிலும், போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் கிளர்ச்சி எழுந்துள்ளது.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை வாயிலில் குவிந்துள்ளனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்தபோராட்டக்காரர்கள், அங்கிருந்த ஏராளமான சொகுசுக் கார்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபட்ச, வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பல் ஒன்றில், கோத்தபயவின் விலைஉயர்ந்த உடமைகள் ஏற்றப்படுவதாகவும் விடியோக்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: தமிழகத்தில் புதிதாக ஒரு ஸ்டாலினிசம்!
இலங்கையில் முதல் முறையாக, அதிபர் மாளிகையையும், அதிகாரப்பூர்வ அதிபர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை அதிபர் மாளிகையிலிருந்த அதிபர் கொடி இறக்கப்பட்டு, இலங்கை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
இலங்கை நாடாளுமன்ற அவசர கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.