கொழும்பு: அதிபர் மாளிகையைத் தொடர்ந்து, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டுக்குள்ளும் போராட்டக்காரர்கள் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகிவரும் நிலையில், இன்று அதிபர் கோத்தபயவுக்கு எதிரான மக்கள் புரட்சி வெடித்தது.
இதையும் படிக்க.. இலங்கை அதிபராகிறார் நாடாளுமன்ற அவைத் தலைவர்?
கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர். அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தடுக்க முயன்ற ராணுவத்தினரின் முயற்சி வீணானது. பாதுகாப்புக் கருதி, அதிபர் கோத்தபய ராஜபட்ச அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறி, ராணுவ தலைமையகத்துக்குள் தஞ்சம் புகுந்தார்.
இதையடுத்து, இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள் அவரது வீட்டுக்குள்ளும் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.