மாலத்தீவில் பதுங்கியிருந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூருக்கு தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டில் அசாதாரணமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி மக்கள் நடத்திய கடும்போராட்டம் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபட்ச அந்நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
மேலும் மக்கள் போராட்டம் வலுவடைந்ததையடுத்து, நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்காத நிலையில் அவர் மாலத்தீவில் தஞ்சமடைந்திருந்ததாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் மாலத்தீவில் உள்ள இலங்கை மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்களில் குதித்ததையடுத்து அவர் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க | இலங்கை ராணுவத்தினர் கவச வாகனத்தில் ரோந்து
புதன்கிழமை இரவு கோத்தபய ராஜபட்ச, அவரது மனைவி மற்றும் இரண்டு தனிப்பாதுகாவலர்கள் உடன் அவர் மாலத்தீவிலிருந்து விமானம் மூலமாக சிங்கப்பூர் சென்றடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நீடித்துவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.