Enable Javscript for better performance
கூகுள் இணை நிறுவனரின் மனைவியுடன் தொடர்பா? என்ன சொல்கிறார் எலான் மஸ்க்??- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கூகுள் இணை நிறுவனரின் மனைவியுடன் தொடர்பா? என்ன சொல்கிறார் எலான் மஸ்க்??

    By DIN  |   Published On : 26th July 2022 12:46 PM  |   Last Updated : 26th July 2022 12:46 PM  |  அ+அ அ-  |  

    elon

    என்ன சொல்கிறார் எலான் மஸ்க்??


    கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹனுடன் திருமணத்துக்கு மீறிய உறவு இருப்பதாகக் கூறப்படும் தகவல்களை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    செர்ஜி பிரின்னுடனான நீண்ட கால நட்பானது, நிக்கோல் - எலான் மஸ்க் தொடர்பால் முறிந்துவிட்டது. இந்த தொடர்பே, கூகுள் இணை நிறுவனர் தனது முதலீடுகளை, எலான் மஸ்க் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வழிவகுத்தது என்று வால் ஸ்டிரீட் என்ற நாளேடு வெளியிட்ட செய்திக்கு எலான் மஸ்க் இந்த மறுப்பை பதிவிட்டுள்ளார்.

    டெஸ்லா நிறுவனத்தின் இணை நிறுவனர் எலான் மஸ்குக்கு கடந்த டிசம்பர் மாதம் பிரின்ஸ் மனைவி நிகோல் ஷனஹனுடன் மியாமியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது தொடர்பு ஏற்பட்டதாக, இது குறித்து நன்கு அறிந்த அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத சிலரை மேற்கோள்காட்டி வால்ட் ஸ்டிரீட் நாளேடு தெரிவித்துள்ளது. 

    51 வயதாகும் எலான் மஸ்க், 2008ஆம் ஆண்டு பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்தபோது மின்சார கார் தயாரிப்புக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்தவர்தான் 48 வயதாகும் பிரின். இவர்களுக்கு இடையேயான நீண்ட கால நட்பும் இந்த தொடர்பால் முறிந்து போயிருக்கிறது. அது மட்டுமல்ல, கடந்த ஜனவரி மாதம் ஷனஹனிடமிருந்து விவாகரத்துக் கோரவும் காரணமாக இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

    இந்த செய்திகளுக்கு, பல லட்சம் பின்தொடர்வோரைக் கொண்டிருக்கும் டிவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் கூறியிருப்பது என்னவென்றால், அந்த தகவல் உண்மையல்ல. கடந்த மூன்று ஆண்டுகளில், பிரின் மனைவியை நான் இரண்டே முறைதான் நேரில் சந்தித்தேன். அப்போது ஏராளமானோர் அங்கே கூடியிருந்தனர். அந்த ஜோடிகளுக்கு இடையே எந்த காதல் ரசமும் இருந்திருக்கவில்லை. இப்போதும் பிரின் எனது நண்பர்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

     

    அதுமட்டுமல்ல, எலான் மஸ்குடன் தனது மனைவியின் உறவு குறித்து அறிந்த கொண்டதால்தான், பிரின், தன் நிறுவனத்தின் ஆலோசர்களிடம், தனது தனிப்பட்ட முதலீடுகள் அனைத்தையும் மஸ்கின் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய கடந்த சில மாதங்களாக அறிவுறுத்தி வந்ததாகவும் அந்த நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மஸ்கின் நிறுவனங்களில் பிரினின் தனிப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்து எந்த தகவலும் இல்லை மேலும், அதுபோன்ற விற்பனை ஏதும் நடந்ததா என்பது குறித்தும் தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2019ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் மௌண்டெய்ன் வியு பகுதியில் நிகோல் ஷனஹன் - செர்ஜி பிரின் வாழ்ந்து வந்தனர். எலான் மஸ்க் உலகின் முன்னணி பணக்காரராக இருக்கிறார். பிரின் இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார்.

     

    எலான் மஸ்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அண்மையில் கண்டறியப்பட்ட புதிய தகவல்தான் இந்த திருமணத்துக்கு மீறிய உறவு. இதற்கு முன்பு, ரிப்போர்ட்ஸ் வெளிப்படுத்திய செய்தியில், எலான் மஸ்க், அவரது நியூராலிங்க் நிறுவனத்தில் பணியாற்றிய மூத்த நிர்வாகி மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையானது வெளிச்சத்துக்கு வந்தது. 

    2016ஆம் ஆண்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் கூறிய பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவருக்கு ஒரு கணிசமான தொகை நிவாரணமாக வழங்கப்பட்டது என்கிறது இன்சைடர் செய்தி.

    ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை என்று கூறும் எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் குறுக்கீடுகளை செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டவை என்று கூறுகிறார். தற்போது டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை எலான் மஸ்க் கைவிடும் எண்ணத்தில் இருக்கிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    மறுபக்கம், பிரின் - ஷனஹன், விவாகரத்துக்கு பின் வழங்கப்படும் தொகை குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இருவருக்குள்ளும் திருமணத்துக்கு முந்தைய ஒப்பந்தம் இருக்கும்போதிலும், ஷனஹன் தரப்பில் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் ஜீவனாம்சம் கேட்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp