விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியிலிருந்து ஜெர்மனி சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு ஏர்லைன்ஸ் சார்பில் வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்துள்ளது. இது தொடர்பான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் பகுதிக்கு சன் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் பயணிகளுடன் சென்றுள்ளது.
அப்போது விமானத்தில் பயணிகளுக்கு வழக்கம்போல் உணவு வழங்கப்பட்டுள்ளது. இதில் அலுவலக நண்பர்களுடன் பயணித்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவில், பாம்பின் தலை இருந்துள்ளது.
பாதி உணவை உண்ட பிறகு அப்பெண் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து விமான ஊழியர்களிடம் புகாரளித்துள்ளார். இதனை விடியோவாகவும் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விமானத்தில் உணவு வழங்கிய நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த சன் எக்ஸ்பிரஸ், உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளது. விமானத்தில் வரும் பயணிகளுக்கு முன்னுரிமை அளித்து தரமான சேவையை வழங்குவதை நிர்வாகம் உறுதி செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு உணவு ஒப்பந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏர்லைன்ஸ் வழங்கிய வசதிகளுக்குட்பட்டே தாங்கள் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.