தீவிரமாகும் உணவுத் தட்டுப்பாடு: ஐநாவிடம் உதவி கோரும் இலங்கை
பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இருக்கும் இலங்கை உணவுத் தேவைக்காக ஐக்கிய நாடுகள் அவையின் உதவியை நாடியுள்ளது.
கடும்பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சிக்கியுள்ள இலங்கை அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | இலங்கைக்கு 3.3 டன் மருத்துவ உதவிகளை வழங்கியது இந்தியா
இந்நிலையில் நாளுக்குநாள் தீவிரமடையும் உணவுத் தேவையை நிவர்த்தி செய்ய அந்நாட்டு அரசு ஐக்கிய நாடுகள் அவையின் உதவியை நாடியுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரம சிங்க இலங்கையில் நிலவும் உணவுத் தேவையை ஈடுகட்ட புதிய பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நெருக்கடியிலிருந்து மக்களை மீட்க ஐநா உதவ வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
கடந்த ஆண்டு அரிசி உற்பத்தியில் சரிவை சந்தித்த இலங்கையில் நிலவி வரும் உரத்தட்டுப்பாடு உணவு தானிய உற்பத்திக்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொழும்புவில் இலங்கைக்கான இந்தியத் தூதரை சந்தித்த அந்நாட்டின் அமைச்சர் மகிந்த அமரவீர நெல்சாகுபடிக்கு உரம் வழங்கி உதவ வேண்டும் எனக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.