
போரிஸ் ஜான்சன் உடன் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். 126 நாள்களைக் கடந்து தொடரும் இந்தப் போரில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியப் படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
குறிப்பாக, கிழக்கு உக்ரைனில் முக்கியத்துவம் வாய்ந்த செவெரோடொனட்ஸ்க் நகரை ரஷிய படை முழுமையாகக் கைப்பற்றிய நிலையில், அருகில் உள்ள லிசிசான்ஸ்க் நகரிலும் தரைவழி மற்றும் வான்வழியாக குண்டுமழை பொழிந்து வருகிறது.
லுஹான்ஸ்க் மாகாணத்தில் உக்ரைன் ராணுவத்தின் வசமிருந்த கடைசி பெரிய நகரான செவெரோடொனட்ஸ்க் ரஷியாவிடம் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக வீழ்ந்தது. அதன் அருகேயுள்ள லிசிசான்ஸ்க் நகரிலும் நுழைந்த ரஷிய படையினா், திங்கள்கிழமை அந்த நகரத்தின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதையும் படிக்க | ’நேட்டோவில் இணைந்தால்..’ ஃபின்லாந்து, ஸ்வீடனுக்கு புதின் எச்சரிக்கை
இந்நிலையில், ரஷியாவை சமாளிக்க உக்ரைனுக்கு 1 பில்லியன் பவுண்டுகள்(ரூ.9,500 கோடி) ராணுவ உதவி வழங்க முடிவு செய்துள்ளதாக நேட்டோ தலைவர்கள் மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்த மூலம் ராணுவ ஆயுதங்கள், டாங்கிகள், ஏவுகணைகள் அனுப்பி வைக்கபட உள்ளன.
மேலும், போர் துவங்கியதிலிருந்து இதுவரை உக்ரைனுக்கு 2.3 பில்லியன் பவுண்டுகள் (ரூ.20,000 கோடி) வரை உதவி செய்துள்ளதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ரஷியாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு 6,000 ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் பிரிட்டன் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.