
உக்ரைனின் கார்கிவ் நகர் அருகே மெரீஃபாவில் உள்ள பள்ளி மீது இன்று காலை ரஷியப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா 20 நாள்களைக் கடந்து போரிட்டு வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ரஷியா, தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இன்று உக்ரைனின் மரியுபோல் பகுதியில் உள்ள திரையரங்கத்தை வான்வழித் தாக்கியுள்ளது.
எனினும் மரியுபோல் திரையரங்கத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் பலியாகியிருக்கலாம் என்றும் திரையரங்கத்தில் இருந்து புகை மூட்டத்தில் இருந்து சிலர் தப்பித்து வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, வியாழக்கிழமை காலை கார்கிவ் நகர் அருகே மெரீஃபா பகுதியில் உள்ள பள்ளி மீது ரஷியப் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், ஒரு கலாசாரக் கூடத்தையும் தாக்கி அழித்துள்ளனர். இதன் அருகில் உள்ள சில வீடுகளும் சேதமடைந்துள்ளன.
ஆனால், அந்த கட்டிடங்களில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.