ஆப்கானிஸ்தானில் ஆண் உறவினர் துணையின்றி பெண்கள் விமானத்தில் பயணிக்க முடியாது என தலிபான் அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அதன்பின்னர் அங்கு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகள் கல்வி கற்கவும், பெண்கள் வேலைக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
தற்போது, ஆப்கனில் 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. பெண்கள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சமீபத்தில் கூட்டறிக்கை விடுத்தன.
இந்நிலையில் அடுத்த தடையாக, பெண்கள் விமானத்தில் நீண்ட தூரம் பயணிக்கத் தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆண் உறவினர் துணையின்றி விமானத்தில் செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர்.
மேலும் இது தற்காலிகத் தடை என்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை மாறியபிறகு அவர்கள் மீண்டும் விமானத்தில் தனியே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தலிபான்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
விமானத்தின் பெண்களை தனியே அனுமதிக்கக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கெனவே ஆப்கனில் நகரங்களுக்கு இடையே சாலைவழியில் பெண்கள் தனியே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.