
இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் காவல் துறையினரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில், ராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் போராட்டத்தின் எதிரொலியாக நேற்று பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்ச விலகினார்.
படிக்க | வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லமாட்டோம்: மகிந்த ராஜபட்ச மகன் விளக்கம்
அவரது வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததைத் தொடர்ந்து தற்போது அவர், தனி ஹெலிகாப்டர் மூலம் திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. அதற்கேற்ப ஹெலிகாப்டரில் இருந்து ராஜபட்ச குடும்பத்தினர் தப்பிச்செல்லும் காட்சிகள் வெளியாகின.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள் கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பேருந்து உள்ளிட்ட அரசு வாகனங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் இல்லம் முன்பு இருந்த மக்கள் பேருந்தை கவிழ்த்து எரித்தனர். அவர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். இதனால் பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
படிக்க | ‘மக்கள் வன்முறையை கைவிட வேண்டும்’: இலங்கை அதிபர்
இந்நிலையில், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைகளுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
காவல் துறையினரால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், ராணுவத்தை இலங்கை அரசு கட்டவிழ்த்துள்ளது.
பார்க்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம் - புகைப்படங்களை காண இங்கே கிளிக் செய்யவும்