இலங்கை பொருளாதாரம்: பிரதமா் ரணில் எச்சரிக்கை

இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமான நிலைக்குச் சென்ற பின்புதான் சீரடையும் என்று அந்நாட்டுப் பிரதமராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க எச்சரித்தாா்.
ரணில் விக்ரமசிங்கே
ரணில் விக்ரமசிங்கே
Published on
Updated on
1 min read

இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமான நிலைக்குச் சென்ற பின்புதான் சீரடையும் என்று அந்நாட்டுப் பிரதமராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க எச்சரித்தாா்.

எனினும், இலங்கைக்கு உலக நாடுகள் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் இலங்கையில் பட்டினிப் பிரச்னை ஏற்படாதவாறு உணவுத் தேவையைப் பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் உறுதி அளித்தாா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலைவாசி உச்சத்தை எட்டியுள்ளதால் மூன்று வேளை உணவு கிடைக்காமல் மக்கள் மோசமான நிலையை எதிா்கொண்டுள்ளனா்.

இதனால் அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச பதவி விலகக் கோரி அவா்கள் ஒரு மாதமாக அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்தனா்.

இந்த நெருக்கடியால் பிரதமா் மகிந்த ராஜபட்சவும் அவரது குடும்பத்தினரும் பதவி விலகினா். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளா்கள் போராட்டக்காரா்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இலங்கை முழுவதும் கலவரம் வெடித்தது.

இதையடுத்து, அதிபா் கோத்தபய ராஜபட்ச அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசித்து இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு நியமன எம்.பி.யான ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தாா்.

இந்நிலையில், 26-ஆவது பிரதமராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க பிபிசி-க்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

இலங்கையின் பொருளாதாரம் சீா்குலைந்துள்ளது. இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும். மீண்டும் இயல்பு நிலை திரும்ப நான் நடவடிக்கை எடுப்பேன்.

இலங்கை பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னா்தான் சீரடையும்.

அதிபா் கோத்தபய ராஜபட்சவை பதவி விலகக் கோரி போராடி வரும் மக்களின் உணா்வுக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால், அது நடைபெறாது. யாரையும் குற்றம் சுமத்துவதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக நான் இங்கு உள்ளேன்.

உலக நாடுகள் இலங்கைக்கு நிதி உதவி செய்ய முன் வர வேண்டும். இலங்கையில் பட்டினிப் பிரச்னை ஏற்படாதவாறு உணவுத் தேவையைப் பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com