இஸ்லாமாபாத்: நாட்டில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின்போது மீட்புப் பணியில் சரிவர ஈடுபடாத பாகிஸ்தான் அரசு மீது அந்நாட்டு மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாட்டன் ஆய்வின் முடிவுகள் இந்த வாரம் வெளியானது. அதன் அடிப்படையில், சுமார் 14 மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் பாதித்த 38 இடங்களில் இருக்கும் மக்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட அரசு செய்துதரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
வெள்ளம் காரணமாக, இப்பகுதியைச் சேர்ந்த 92 சதவீத மக்கள், தங்களது கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளனர். வெள்ளம் ஏற்பட்டு 6 வாரங்களுக்குப் பிறகும் கூட, பல குடும்பங்கள் இன்னமும் சாலையோரங்களில் வெட்டவெளியில்தான் தங்கியுள்ளனர். ஒரு சிறு கூரை கூட இல்லாமல்.