உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கு ரஷியாவை தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. அவையில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி கோரியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 7 மாதங்களை எட்டியுள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.
இந்நிலையில் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் அவையில் காணொளியில் பேசிய உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்கு ரஷியாவை சிறப்பு நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்று கோரினார்.
ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது, லட்சக்கணக்கான மக்களை இடம்பெயர வைத்தது, நகரங்களை அழித்தது என உக்ரைனுக்கு எதிராக ஒரு பெரிய குற்றம் நடந்துள்ளது. நாங்கள் நியாயமான தண்டனையை கோருகிறோம். எங்கள் நாட்டு பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர், எங்கள் ஆண்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். எங்கள் நாட்டை அபகரிக்க முயற்சித்ததாக தண்டனையை கோருகிறோம்.
ரஷியாவை தண்டிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும். மேலும் இந்த போருக்கான விளைவுகளை சரிசெய்ய ரஷியா இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் எங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்' என்று பேசியுள்ளார்.