

பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பைப் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானிய துறைமுக நகரமான வயகமா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பேசிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பைப் வெடிகுண்டு பிரதமரை நோக்கி வீசினார். குண்டு வெடிப்புச் சத்தத்தைத் தொடர்ந்து பிரதமரை பத்திரமாக பாதுகாப்பு வீரர்கள் வெளியேற்றினர்.
நல்வாய்ப்பாக வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பினார்.
வெடிகுண்டு வீசிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். அவரிடம் பிரதமர் மீது குண்டு வீசப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி நாரா நகரில் நடைபெற்ற அரசியல் பிரசார பேரணி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது அருகில் இருந்த ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நிலையில், தற்போது, பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடி குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.