கிறிஸ்துமஸ் நாள் நெருங்கிற வேளையில், உலகம் முழுவதும் குழந்தைகள் ஆர்வமாகக் காத்திருக்கும் சாண்டா கிளாஸின் வருகையை அமெரிக்க ராணுவம் பின்தொடரவுள்ளது.
ரேடார்கள், சென்சார்கள் மற்றும் விமானங்கள் ஆகியவற்றின் மூலம் வடக்கு அமெரிக்க வான்வழி பாதுகாப்பு அமைப்பு, சாண்டாவின் பனிச்சறுக்கு குதிரைவண்டி வடக்குத் துருவத்தில் இருந்து புறப்பட்டது முதல், கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பின்தொடரவுள்ளது.
இதற்கான பிரத்யேக இணையத்தளம் https://www.noradsanta.org/en/ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
“வடக்கு அமெரிக்காவைப் பாதுகாப்பாக வைத்திருக்க எந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோமோ அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாண்டாவை ராணுவம் பின்தொடரவுள்ளது” எனத் தெரிவித்துள்ளது ராணுவம்.
ராணுவம், சாண்டாவின் பயணத்தைப் பின்தொடர அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுபோல தனது ரகசியத்தை மறைக்க சாண்டா செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடும் என ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மாத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துவ நம்பிக்கையின் அடிப்படையில் விருப்பங்களை நிறைவேற்றும் சாண்டா தாத்தாவை 1955-ம் ஆண்டில் அமெரிக்க வான்வழிப்படை பின்தொடர ஆரம்பித்தது.
அந்த ஆண்டில் குழந்தை ஒன்று தவறுதலாக ராணுவத்தின் உதவி எண்ணுக்கு சாண்டா கிளாஸிடம் பேசுவதாக நினைத்து அழைத்துள்ளது. அப்போது ராணுவ தளபதியாக இருந்த ஹாரி சூப், அந்தக் குழந்தைக்கு சாண்டா எங்கு வந்து கொண்டிருக்கிறார் எனத் தகவலைத் தெரிவித்தார். அடுத்தடுத்து அழைப்புகள் வரத் தொடங்கவே தளபதி, இன்னொரு அதிகாரியை நியமித்து அழைப்புகளுக்குப் பதிலளிக்க வைத்தார்.
இதையும் படிக்க: கிறிஸ்துமஸ் அன்று சென்னையில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்
இந்தாண்டு 1,100 தன்னார்வலர்கள் மக்களின் அழைப்புகளுக்குப் பதில் அளிக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர். சாண்டாவின் வருகையைத் தெரிந்து கொள்ள யார் வேண்டுமானாலும் ராணுவம் அறிவித்த எண்ணுக்கு அழைக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.