
பிபிசி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வருமான வரித்துறை சோதனைக்கு மத்தியில் அந்நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டது. நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த கலவரத்தில் மோடிக்கும் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகள் நடைபெற்றன.
இதையும் படிக்க | அதிக சாராயம் குடிப்பது யார்? போட்டியில் பறிபோன உயிர்!
இந்திய அரசியலில் முக்கியக் கவனம் பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகமான பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்து இரண்டு பாகங்களாக வெளியிட்டது. இதனை கண்டித்த மத்திய அரசு ஆவணப்படத்திற்கு தடைவிதித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இடதுசாரி மாணவர்கள் சங்கங்கள் தடையை மீறி ஆவணப்படத்தை திரையிடவும் செய்தன.
இந்நிலையில் வருவான வரித்துறையினர் நாட்டில் உள்ள பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மும்பை, தில்லி அலுவலகங்களில் 2வது நாளாக நடைபெறும் இந்த சோதனைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையும் படிக்க | காஷ்மீரில் ராகுல் காந்தி!
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், “பத்திரிகை சுதந்திரம், கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை மற்றும் மத சுதந்திரத்திற்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவளிக்கும். சர்வதேச உரிமைகள் ஜனநாயகத்தில் அடிப்படையானவை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் பிபிசி நிறுவனங்களில் நடந்துவரும் வருமான வரித்துறையின் சோதனையை அறிந்திருப்பதாகத் தெரிவித்த அவர், உலகம் முழுவதும் சுதந்திரமான ஊடக செயல்பாட்டிற்கு ஆதரவளிப்பதாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்த ஊடக செயல்பாடு முக்கியம் எனவும் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.