ஹமாஸுக்கு எதிரான இந்தப் போரில் இஸ்ரேல் அரசுக்கு 200 பில்லியன் ஷெக்கல் (51 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவு ஏற்படுமென கல்கலிஸ்ட் என்கிற இஸ்ரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாய்.
மேலும், இந்த மதிப்பீடு என்பது இஸ்ரேலின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாகும்.
எட்டு முதல் 12 மாதங்களுக்கு இந்தப் போர் நடைபெறுமானால், ஹிஸ்புல்லா, ஈரான் தலையீடு இன்றி ஹமாஸை மட்டும் எதிர்கொள்ள இஸ்ரேல் இத்தனை லட்சம் கோடிகளை செலவு செய்ய வேண்டியிருக்கும் என அந்நாளிதழ் தெரிவிக்கிறது.
இஸ்ரேல் தங்களது கையிருப்பில் உள்ள 3,50,000 பேரை ராணுவத்தில் பணியாற்ற அழைப்பதற்கும் சேர்த்து இந்த மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த 200 பில்லியன் ஷெக்கல் என்பது இஸ்ரேல் அமைச்சகத்தின் நம்பிக்கையான மதிப்பீடு என கல்கலிஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது இஸ்ரேல்.
இதில் பாதித் தொகை, பாதுகாப்புக்காக மட்டுமே, 1 பில்லியன் ஷெக்கல் ஒரு நாளைக்குச் செலவிட வேண்டியிருக்கும்.
மற்றுமொரு 40-60 பில்லியன் தினந்தோறும் ஏற்படும் வருவாய் இழப்புக்கும் 17-20 பில்லியன் தொழிலுக்கான இழப்பீடாக கொடுப்பதற்கும் மற்றுமொரு 10-20 பில்லியன் புனர்வாழ்வுக்கும் செலவாகும் என அந்நாளிதழ் விளக்கியுள்ளது.
இதையும் படிக்க: காஸாவில் ஹமாஸ் ஆட்சி தொடர முடியாது
இஸ்ரேல் மீது எதிர்பாராதத் தாக்குதலை ஹமாஸ் பயங்கரவாத குழு, அக்.7 அன்று நடத்தியது. அதற்கு பதில்வினையான ஹமாஸை வேரோடு அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் 30-வது நாளாக காஸா மீது தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
நாளுக்கு நாள் போரின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், காஸாவில் சிக்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அடிப்படை வாழ்வாதார உதவிகள் கிடைக்க உலகின் பல பகுதிகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.