ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான வறட்சிக்குப் பெயர் பெற்ற சோமாலியாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த பெருமழை காரணமாக நேரிட்ட வெள்ளத்தால் 31 பேர் உயிரிழந்தனர்.
அக்டோபரில் தொடங்கிய இந்த மழை காரணமாக 5 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை நாட்டின் தலைநகர் மொகாடிஷுவில் செய்தியாளர்களுடன் பேசிய தகவல் துறை அமைச்சர் தாவூத் ஆவீஸ் தெரிவித்தார்.
தெற்கு சோமாலியாவில் கெடோ பகுதியில்தான் பெரும் பாதிப்பு நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நூறாண்டுகளுக்கு ஒரு முறைதான் இத்தகைய பெரு மழை பெய்யும். இந்த மழை - வெள்ளத்தைச் சமாளிக்கத்தான் முடியுமேயொழிய தடுக்க முடியாது என்று மனிதநேய உதவிகளுக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்காக சோமாலியாவுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 208 கோடி) இந்த அமைப்பு வழங்கியுள்ளது.
சோமாலியாவுக்கு அருகேயுள்ள கென்யா நாடும் கடும் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 உயிரிழந்ததாக கென்ய ரெட்கிராஸ் தெரிவித்துள்ளது.