ஈக்வடார் நாட்டின் எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களில் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளராக அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரும் பத்திரிகையாளருமான பெர்னாண்டோ(வயது 59) இருந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை கிட்டோ நகரில் பெர்னாண்டோ பிரசாரத்தை முடித்துவிட்டு காரில் ஏறச் சென்றபோது அடையாளம் தெரியாத ஒருவர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பெர்னாண்டோவின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
பெர்னாண்டோவின் மறைவுக்கு அந்த நாட்டின் அதிபர் மற்றும் சக வேட்பாளர்கள் இரங்கலும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.