நேபாளத்தின் பல்பா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 18 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சல்ஜஹந்தி-தோர்பட்டான் சாலைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. ரூபந்தேகி மாவட்டத்தின் சல்ஜஹந்தியிலிருந்து குர்சானே பகுதிக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை காத்மண்டு தினசரி ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: நீண்ட கால நண்பரை இழந்துவிட்டேன்: ரஜினிகாந்த்
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இந்தப் பேருந்து விபத்தில் பலியான 6 பேரும் பெண்கள் ஆவர். பேருந்தில் பயணித்து பலத்த காயமடைந்த மற்றப் பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் லும்பினி மாகாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் பேருந்துக்கு அடியில் சிக்கியுள்ளதால் அவர்களின் உடல்களை மீட்பதில் மீட்புக் குழுவினர் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மோசமான வானிலை நிலவுவதும் மீட்புப் பணிகளை சவாலானதாக மாற்றியுள்ளது என்றனர்.
இந்த பேருந்து விபத்து குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை நேபாள பிரதமர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெற விரும்புகிறேன். அரசுப் போக்குவரத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய அனைவரது பங்களிப்பும் முக்கியம் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஆஸி. டெஸ்ட் தொடருக்குத் தயாராகி வருகிறேன்: அஸ்வின்
சாலைகள் சரிவர பராமரிக்கப்படாததால் நேபாளத்தில் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.