இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பை மீறி இலங்கைக்கு வந்துள்ள சீனக் கப்பல் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளது.
இந்திய பெருங்கடலில் கடல்சார் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக சீனாவின் ‘ஷி யான் 6’ ஆய்வுக் கப்பல் அக்டோபர் மாதம் இலங்கை வரவுள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆய்வானது இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகள் கவலை தெரிவித்தன.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் வலியுறுத்தலை தொடர்ந்து, சீனக் கப்பலுக்கான அனுமதி வழங்குவதில் சிறிது காலதாமதம் செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் இலங்கை அதிபர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டவுடன் அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த வாரம் புதன்கிழமை இலங்கை கடல் பகுதிக்குள் சீனாவின் ஆய்வுக் கப்பல் வருகைதந்தது.
இந்த நிலையில், இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் இணைந்து சீனாவின் விஞ்ஞானிகள் மேற்கு கரையில் கடல்சார் ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்புவில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடல்சார் ஆய்வு என்ற பெயரில் இந்தியாவை உளவு பார்க்கவும், இந்திய பெருங்கடலின் வளங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்தை ஆராயவும் சீனக் கப்பல் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்தாண்டு பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கேள் கண்காணிக்கும் சீன கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.