காஸாவின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது அதனை மீண்டும் கட்டியெழுப்ப பல ஆண்டுகள் ஆகும் என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
கடந்த அக். 7-ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காஸாவில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது எதிர்பாராத திடீர் தாக்குதல் நடத்தியதையடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது.
காஸா மக்கள் அத்தியாவசியமான உணவு, தண்ணீர், மருந்துகள் இன்றி தவிக்கின்றனர். இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் 4 நாள்களுக்கு போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர். போரினால் வேறு பகுதிகளுக்குச் சென்ற மக்கள் தங்களின் சொந்த குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்கின்றனர். எனினும் வடக்கு காஸாவில் மக்களை இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கப்படவில்லை.
இதையும் படிக்க | காஸாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகள்!
இந்நிலையில் மத்திய காஸாவில் உள்ள நுசய்ரத் அகதிகள் முகாமில் வசிக்கும் ஹம்சா இப்ராஹிம் என்பவர் போர் நிறுத்தம் குறித்து, மகிழ்ச்சியும் சோகமும் கலந்து இருப்பதாகத் தெரிவித்தார்.
'காஸாவில் குண்டுச் சத்தத்தினால் ஏற்படும் வலி மற்றும் மன அழுத்தத்தில் இருந்து சற்று அமைதி பெற இந்த போர் நிறுத்தம் உதவியிருக்கிறது. எங்களது தினசரி நடவடிக்கைகளை சற்று மீட்டெடுக்கவும் மேலும் எங்கள் குடும்பத்தினரை மீண்டும் இணைக்கவும் வாய்ப்பளித்திருக்கிறது. எனினும் அந்த கொடுமை மீண்டும் ஏற்படும் என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது' என்றார்.
இதையும் படிக்க | அடுத்த வாரம் இஸ்ரேல் செல்கிறார் எலான் மஸ்க்!
மேலும், 'காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப சில நாட்கள் போர் நிறுத்தம் போதாது. வடக்கு காஸாவில் வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்த மக்கள் எங்கு செல்வார்கள்? காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப எங்களுக்கு ஆயிரக்கணக்கான டிரக்குகள் தேவை, காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப எங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் தேவை' என்றும் தெரிவித்தார்.
காஸா மக்கள் தங்களுடைய வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்துவிட்டதாகவும் தங்களின் இதயமும் நொறுங்கிவிட்டதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
போர் நிறுத்தத்தையடுத்து எகிப்து எல்லையில் இருந்து காஸாவுக்குள் உணவு, எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் நிரம்பிய லாரிகள் செல்கின்றன. மேலும் ஒப்பந்தப்படி, பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பரஸ்பரம் சிறைக் கைதிகள் - பிணைக் கைதிகள் விடுவிப்பு