காஸாவில் மேலும் ஒருநாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் பெண்கள், குழந்தைகள் உள்பட 240 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல், காஸா மீது கடும் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இரு தரப்பு பேச்சுவார்தைக்குப் பிறகு 4 நாள்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் பிடித்துச் சென்ற சுமார் 240 பிணைக் கைதிகளில் இதுவரை 97 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல இஸ்ரேல் சிறைகளில் இருந்து 180 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | இதுவரை 97 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!
கூடுதலாக ஒவ்வொரு நாள் போர் நிறுத்தத்திற்கும் 10 பிணைக் கைதிகள் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் கூறியது.
இந்நிலையில், ஹமாஸ் படையினர் கூடுதல் பிணைக் கைதிகளை விடுவிக்கும்பொருட்டு மேலும் ஒருநாள் (வியாழக்கிழமை) போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனை ஹமாஸ் தரப்பும் உறுதி செய்துள்ளது.
இதையடுத்து 7 ஆவது நாளாக போர் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹமாஸ் வசம் உள்ள பிணைக் கைதிகள் மேலும் சிலர் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.