

அமெரிக்க துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளி, முன்னாள் ராணுவ வீரர் என்றும், அவர் மனநலப் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்து வந்தவர் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் மெய்னே நகரில் மூன்று இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பலியான நிலையில், கொலையாளியை நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
பாதுகாப்பு கருதி, அப்பகுதியின் குடியிருப்பாளர்கள் அனைவரும் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மெய்னே நகரில் உள்ள லூயிஸ்டன் பகுதியில் அமைந்திருக்கும் உணவகம், மதுபானக் கூடம், கேளிக்கை விடுதி ஆகியவற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை, இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறையை அணுகுமாறு அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அந்த புகைப்படத்தில் இருப்பவரின் அடையாளம் தெரிய வந்துள்ளதாக காவல்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் ராபர்ட் கார்டு (40) என்பதும், இவர் ராணுவப் படையினருக்கு ஆயுதங்களை கையாளும் பயிற்சி அளித்து வந்த பொறுப்பில் இருந்ததும், மெய்னே நகரின் சாகோவில் உள்ள பயிற்சி நிலையத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ராபர்ட், 2023ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் இரண்டு வாரங்கள் மனநல சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றிருந்ததாகவும், அவருக்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதற்கான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அவர் ராணுவ பயிற்சி மையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்போவதாக எச்சரித்திருந்த நிலையில், அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அவரது செல்லிடபேசி எண்கள் எதுவும் தற்போது உபயோகத்தில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.