தைவானில் புதனன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தத் தீவு கடந்த 25 ஆண்டுகளில் சந்தித்திராத மிக சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் 10 பேர் பலியாகினர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தைவானில் நிலநடுக்கம் தாக்கியப் பகுதிகளில் வாழ்ந்து வந்த 10க்கும் மேற்பட்டவர்களின் நிலை என்ன என்பது குறித்து தகவல்கள் கிடைக்காத நிலையில், மீட்புக் குழுவினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹுவாலியன் பகுதியில், இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடும் பணியிலும், மனிதர்கள் சிக்கியிருந்தால் காட்டிக்கொடுக்கும் கருவிகளைக் கொண்டும் தேடுதல் பணி நடைபெறுகிறது.
ஒரே பகுதியில் 48 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. அவற்றல், தரைதளம் தரைமட்டமாகியிருப்பதால், அதில் சிலர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தைவானின் தெற்குக் கடலோர நகரான ஹுவாலியனுக்கு சுமார் 18 கி.மீ. தெற்கு-தென்மேற்கே, 34.8 கி.மீ. ஆழத்தில் புதன்கிழமை காலை 7.58 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5.28 மணி) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.4 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், 7.2 அலகுகளாகப் பதிவானதாக தைவானின் மத்திய காலநிலை ஆய்வு நிறுவனமும் தெரிவித்தன.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 44 பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவுகோலில் அதிகபட்சமாக 6.4 அலகுகள் வரை பதிவாகின.
இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 963 பேர் காயமடைந்ததாகவும், சுமார் 152 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
தைவானில் 25 ஆண்டுகளுகக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிந்தைய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். அந்தத் தீவின் ஜிச்சி பகுதியில் 1999 செப்டம்பரில் 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் 2,415 பேர் உயிரிழந்தனர்.