பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெண் ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் பிரசவ வலி காரணமாக முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத்(27) வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். பின்னர் வெள்ளிக்கிழமை ஆறு குழந்தைகளைப் அவர் பெற்றெடுத்ததாக டான் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குள் ஆறு குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவர் பெற்றெடுத்துள்ளார்.
பிறந்த குழந்தைகளில் நான்கு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் என்றும் ஒவ்வொன்றும் இரண்டு பவுண்டுகளுக்கும் குறைவான எடை கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு குழந்தைகளும் அவர்களின் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஃபர்சானா தெரிவித்தார். இருப்பினும் குழந்தைகளை மருத்துவர்கள் இன்குபேட்டரில் வைத்துள்ளனர்.
குழந்தைகளைப் பெற்ற பிறகு ஜீனத்துக்கு சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், அடுத்த சில நாட்களில் அவரது உடல்நிலை சீராகும் என்றும் அவர் மேலும் கூறினார்.4.5 மில்லியன் பெண்களில் ஒருவர் மட்டுமே இவ்வளவு அரிதாக கர்ப்பம் தரிப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.