மின்சார தானியங்கி கார்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான டெஸ்லா, நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளில் பணியாற்றிய இரண்டு உயர் அலுவலர்களைப் பணி நீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்சார வாகனங்களுக்கான சூப்பர் சார்ஜர் வணிக பிரிவின் தலைவர் ரெபெக்கா டினுச்சி மற்றும் புதிய தயாரிப்புகள் குழுவின் தலைவர் டேனியல் ஹோ ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் டெஸ்லாவின் உயர் அலுவலர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டினுச்சியின் கீழ் பணியாற்றிய 500-க்கும் அதிகமான பணியாளர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களிடையே நிலவி வரும் விலைப் போட்டி மற்றும் குறைந்து வரும் விற்பனையை கருத்தில்கொண்டு இது போன்ற பணி நீக்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க், “பணியாளர்கள் மற்றும் செலவுக் குறைப்பில் நாம் மிக கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதை இந்த நடவடிக்கைகள் உணர்த்தும் என நம்புகிறேன். சில உயர் அலுவலர்கள் இதனை முக்கியமாக எடுத்து கொள்கிறார்கள், மற்றவர்கள் அவ்வாறு எடுத்து கொள்வதில்லை” என அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக டெஸ்லா தனது பணியாளர்களில் 10 சதவிகிதம் பேரை உலகளவில் பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பேட்டரி ஆய்வுக்குழுவில் பணியாற்றிய உயர் அலுவலர்களான ட்ரூ பாக்லினோ மற்றும் பட்டேல் ஆகியோரும் பணியில் இருந்து விலகினர். சில முதலீட்டாளர்கள் கவலையை வெளிப்படுத்தினாலும் மஸ்க் நன்றி தெரிவித்து பதிவிட்டார்.