2-ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 500 கிலோ எடையுள்ள ராட்சத வெடிகுண்டு ஒன்று பிரிட்டனின் தென்மேற்கே அமைந்துள்ள கடற்கரை நகரமான ப்ளைமௌத் நகர குடியிருப்பு பகுதியில், கடந்த செவ்வாயன்று பூமிக்கடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த குண்டை கடலுக்கடியில் வைத்து செயலிழக்கச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் வசித்து வரும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து, ராணுவ உதவியுடன் மிகுந்த பாதுகாப்பு மற்றும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அந்த வெடிகுண்டு கடலுக்கடியில் வைத்து செயலிழக்கச் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. பிரிட்டன் கடற்படையினர் உதவியுடன் ப்ளைமௌத் கடற்கரை பகுதியில், கடலுக்கடியில் வெடிகுண்டு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கடற்படையைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் உதவியுடன் அந்த குண்டை வெடிகுண்டு நிபுணர்கள் வெற்றிகரமாக வெடிக்கச் செய்ததாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது எதிரி நாட்டு தாக்குதல்களால், தொடர் குண்டுவீச்சு தாக்குதல்களால் பாதிப்புக்குள்ளான நகரங்களில் பிரிட்டனின் ப்ளைமௌத் முக்கியமானது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்று 80 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், போரின் சுவடுகள், இன்னும் அங்கே தடம் பதித்திருப்பதை இந்த சம்பவம் உலகிற்கு உணர்த்துகிறது.