உலகின் முதன்மை செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஓப்பன் ஏஐ, மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மீது மேலுமொரு திருட்டு குற்றம் பதிவாகியுள்ளது. எழுத்தாளர்கள் நிக்கோலஸ் பாஸ்பனேஸ் மற்றும் நிக்கோலஸ் கேஜ் ஆகியோரால் இந்த நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் செய்யறிவு தொழில்நுட்பத்திற்கு, மிகப்பெரிய அளவிலான கட்டுரைகள் மற்றும் இதர எழுத்துவடிவிலான தரவுகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த செய்யறிவு தொழில்நுட்பம் சிறப்பாக இயங்குகிறது.
அந்த தொழில்நுட்பத்திற்கு அளிக்கப்பட்ட தகவல்கள், எழுத்தாளர்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டு , இப்போது அந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் பலகோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது என மேன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 5 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 90 வயது மூதாட்டி!
'திருடர்களுக்கும் இந்த நிறுவனங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை' என இரண்டு எழுத்தாளர்களும் தெரிவித்துள்ளனர். தொடரப்பட்ட இந்த வழக்கில் இரண்டு எழுத்தாளர்களுக்கும் நஷ்டஈடாக ஆளுக்கு 150,000 டாலர்கள் கோரப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 12,476,470 கோரப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக கடந்த செப்டம்பர் மாதம், 17 அமெரிக்க புனைக்கதையல்லாத எழுத்தாளர்கள், சாட் ஜிபிடி (Chat GPT) மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்ஆர் மார்ட்டினும் அதில் அடங்குவார்.
அவரது எ சாங் ஆப் ஐஸ் அன்ட் ஃபயர் (A song of ice and fire) என்ற புத்தகம் அவரது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது புத்தகம் கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of thrones) என்ற தொலைக்காட்சி தொடராக வெளியாக உலகப்புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.